மூடு

மருத்துவக் கல்லூரி

அலுவலக தலைமை அதிகாரியின் பெயர் : மரு. கு. சிவக்குமார், எம்.டி., டி.ஏ.,
முதல்வர்
முகவரி : அரசு தூத்துக்குடி மருத்துவக்
கல்லூரி, காமராஜ் நகர்,
மூன்றாம் மைல், தூத்துக்குடி
தொலைப்பேசி எண் : 0461 2330094
மின் அஞ்சல் முகவரி : deantut[at]tn[dot]gov[dot]in

அலுவலக தலைமை அதிகாரியின் பெயர் : மரு. வி. கலைவாணி, எம்.டி.,
துணை முதல்வர்
முகவரி : அரசு தூத்துக்குடி மருத்துவக்
கல்லூரி, காமராஜ் நகர்,
மூன்றாம் மைல், தூத்துக்குடி
தொலைப்பேசி எண் : 0461 2909000
மின் அஞ்சல் முகவரி : drkalaivanikumar[at]gmail[dot]com

துறை பற்றிய தகவல்கள்:

திட்டங்களும் செயல்களும்:

அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி 16.08.2000 அன்று ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இக்கல்லூரியில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா துறைகள் செயல்பட்டு வருகின்றன. 2000-2001 ஆம் ஆண்டு முதல் 100 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் கல்வி பயின்று வருகிறார்கள். 2013-2014 ஆம் கல்வியாண்டு முதல் 150 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் பயின்று வருகிறார்கள்.

இந்த கல்வியாண்டில் 100 மாணவர்கள் பயிற்சி மருத்துவர்கள் (CRRI) உள்ளிருப்பு பயிற்சி பெற்று வருகிறார்கள். 2003-2004 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு கல்வி ஆண்டும் பட்டய செவிலியப் பயிற்சியில் 55 மாணவிகள் அனுமதிக்கப்பட்டு பயின்று வருகிறார்கள். மேலும் 2005-2006 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு கல்வியாண்டும் இரண்டு வருட டி.எம்.எல்.டி மற்றும் ஒரு வருட சான்றிதழ் பயிற்சி (அவசர சிகிச்சை நுட்புனர், நெஞ்சக நோய் சிகிச்சை, மயக்கவியல் நுட்புநர், அறுவை அரங்கு நுட்புநர் மற்றும் முடநீக்கியல் நுட்புனர்) ஆகிய பயிற்சிகளில் 100 (டி.எம்.எல்.டி) மற்றும் 150 (1 வருடம்) மாணவ/மாணவியர்கள் சேர்க்கையுடன் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மேலும் 2009-2010 ஆம் ஆண்டு முதல் ஆண் மற்றும் பெண்களுக்கான ஒரு வருட செவிலியர் உதவியாளர் பயிற்சியில் ஒவ்வொரு ஆண்டும் 50 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு பயின்று வருகின்றனர்.

அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, குழந்தைகள் அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள் நலப்பிரிவு, மயக்கவியல், தோல் சிகிச்சை, நெஞ்சக நோய்ப்பிரிவு, மனநோய் பிரிவு, மகளிர் மற்றும் மகப்பேறு, முடநீக்கியல், நுண்கதிரியக்கம், நுண்கதிர் வீச்சு, பிசிகல் மெடிசின், பல் அறுவை சிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சை, நரம்பியல் மருத்துவம், புற்றுநோய் அறுவை சிகிச்சை, கேஸ்ட்ரோ என்ட்ரோலஜி, குழந்தைகள் அறுவை சிகிச்சை, சிறுநீரகவியல் சிகிச்சை போன்ற துறைகளும் சரிவர இயங்கி வருகின்றன.

மேலும் 11 அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. காது, மூக்கு, தொண்டை, கண், பல், எலும்பு, சிறுநீரகம், நரம்பியல், குழந்தைகள் அவசரப்பிரிவு, மகப்பேறு மற்றும் குடும்பநலம் போன்றவற்றிற்கான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

இம்மருத்துவமனையில் சிடி ஸ்கேன், அல்ட்ரா சோனோகிராம், இசிஜி, எக்ஸ்ரே, எண்டோஸ்கோபி, காலனோஸ்கோபி, எக்கோ, இஇஜி, பிராங்காஸ்கோப் போன்ற நவீன மருத்துவ உபகரணங்கள் உள்ளன.

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதியும் உள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முழு உடல் பரிசோதனை மிகக் குறைந்த செலவில் நடைபெறுகிறது.

மத்திய ஆய்வகம் மற்றும் இரத்த சேமிப்பு வங்கி போன்ற வசதிகளும் உள்ளன.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு எல்லா மருத்துவ சேவைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. நாள்தோறும் சராசரியாக 2300 வெளி நோயாளிகளும், 1300 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 470 பிரசவங்கள், 640 முக்கிய அறுவை சிகிச்சைகள், 1400 சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் 140 குடும்ப நல அறுவை சிகிச்சைகளும் இங்கு நடைபெறுகின்றன.

இம்மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தரமான செயல்பாட்டுக்காக பல்வேறு கட்டிடங்கள் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளன. ரூபாய் 17.09 கோடி செலவில் 500 படுக்கைகள் கொண்ட புது கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 1112 நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் உள்ளன. கண் அறுவை சிகிச்சை அரங்கு புதியதாக கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்திய மருத்துவக்குழு பரிந்துரையின்படி ரூபாய் 10 கோடி மதிப்பிலான உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன.

ஸ்டெர்லைட் நிறுவனத்தால் குழந்தைகளுக்கான தனி சிகிச்சைப் பிரிவு ஒன்று கட்டப்பட்டுள்ளது

குழந்தைகளுக்கான சீமாங்க் கட்டிடம் புதியதாக கட்டப்பட்டு இயங்கி வருகிறது. மேலும் ரூ. 5.70 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தை நலப்பிரிவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்காக புதிதாக வார்டு ரூ. 1.60 கோடியில் பணி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான புதிய பிரிவு டெலிதெரப்பிக்கான கட்டப்பணி ரூ. 2.86 கோடியில் நடைபெற்று வருகிறது.

மேலும் டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டு அமைக்கப்பட்டு இதற்கென்று தனி மருத்துவ அலுவலர்கள் பணி அமர்த்தப்பட்டு நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்திற்கென புதிய கட்டிடத்தில் அனைத்து வசதிகளுடன் (குளிர்சாதன வசதியுடன்) தனி வார்டு அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும் இக்கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையம் (ICTC) திருத்தப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டம் (RNTCP) ஆண்டி ரெட்ரோ வைரஸ் தெரபி (ART) தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் (NLEP) ஆம்புலன்ஸ் மற்றும் இலவச அமரர ஊர்தி போன்ற வசதிகளும் உள்ளன.

அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியியல், உடலியங்கியல், நுண்ணுயிரியல், நோய்குறியியல், சமூகம் சார்ந்த மருத்துவம், சட்டம் சார்ந்த மருத்துவம், உயிர் வேதியியல், மருந்தியல் போன்ற துறைகள் இயங்கி வருகின்றன. மேலும் நுண்ணுயிரியல், உயிர்வேதியியல், நோய்க்குறியியல் துறைகளில் ஆய்வுக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரியிலுள்ள சட்டம் சார்ந்த மருத்துவத் துறையில் ஒரு ஆண்டுக்கு சுமார் 750 பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இக்கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் பயன்பாட்டிற்காக நூலகம் ஒன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு 11290 புத்தகங்கள் உள்ளன. பாடப்புத்தகங்கள் தற்போதைய பதிப்புகளும் இந்நூலகத்தில் உள்ளன.

இக்கல்லூரியில் 200 மாணவர்கள் தேர்வு எழுதக்கூடிய வகையில் குளிர்சாதன வசதியுடன் தேர்வுக்கூடமும், மாணவர்களின் பயன்பாட்டிற்காக 700 இருக்கைகள் கொண்ட நவீன கலையரங்கம், நவீன உடற்பயிற்சிகூடம் உள்ளன.

மாணவர், மாணவியர்கள் மற்றும் பயிற்சி மாணவர்களுக்கு தனித்தனி விடுதி வசதிகளும் உள்ளன. இக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இக்கல்லூரி வளாகத்தில் குடியிருப்புகள் உள்ளன.